Search This Blog

Translate

மூத்த பத்திரிகையாளர் மீது கொடூர தாக்குதல் – நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்

 சென்னை :

புதுக்கோட்டை மாலைமலர் நிருபர் திரு.ச.மனோகர் அவர்கள் மீது சமூக விரோதிகள் சிலர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, வீட்டில் உள்ள வாஷிங் மெஷின், டிவி, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மாலைமலர் நிருபர் திரு.மனோகர் அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று செய்தியாளர்களை தாக்குவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்ட மாலைமலர் செய்தியாளர் மனோகர் புதுக்கோட்டையில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலுக்கு அப்பகுதியில் வீடு வாடகை கொடுக்க சில உரிமையாளர்கள் மறுத்துள்ளனர்.




இந்த செயலுக்கு மனோகர் தான் காரணம் என தவறுதலாக புரிந்து கொண்டு அந்த கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் நேற்று (07/06/2025) மதியம் சுமார் 2 மணி அளவில் மனோகர் வீட்டிற்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.  இதில் படுகாயமடைந்த மனோகர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மூத்த செய்தியாளரான மனோகர் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு பிணையில் வெளிவர முடியாத சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழக அரசையும் காவல்துறையையும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் வலியுறுத்துகிறது.

DGP  Shankar Jiwal Ips



செய்தியாளர்களுக்கு தொடர்ந்து சமூக அச்சுறுத்தல் உள்ளது. இதன் உண்மை பின்னணி என்ன என்பதை காவல்துறை முழுமையாக விசாரணை செய்யவேண்டும். வீடு வாடகைக்கு விடவில்லை என்பதற்காக மட்டும் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடைபெற்றதா?, இல்லை வேற ஏதேனும் திட்டமிட்ட தாக்குதலா? என்பதனை முழுமையாக விசாரணை செய்யவேண்டும். இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் வலியுறுத்துகிறது.

நில ஆக்கிரமிப்பு, சமூக விரோத குற்றச் செயல்கள் குறித்து செய்திகள் சேகரித்தால், செய்தியாளர்களுக்கு சமூக விரோதிகளால் பெரும் அச்சுறுத்தலும், கொலை மிரட்டலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மேலும், செய்தியாளர்களை தவறாக சித்தரிப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோன்ற நிலை நீடித்தால் ஜனநாயகம் பெரும் கேள்வி குறியாகும்.

இதுபோன்ற தாக்குதல் சம்பவம் ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது. செய்தியாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது ஜனநாயக படுகொலையாகும்.

"உண்மையை வெளிப்படையாக சொல்லும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஆகியவை ஜனநாயகத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன.  ஆனால், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பணம் படைத்தவர்கள் கூலி படையை ஏவி தாக்குதல் நடத்துவதும், செய்தியாளர்களை அவதூறாக பேசுவதும்,  தவறாக சித்தரித்து மிரட்டுவதும் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

முன்பெல்லாம் செய்தித்தாளில் ஏதாவது ஒரு செய்தி, தகவல் பிடிக்கவில்லை என்றால் அது பற்றி ஆசிரியருக்கு கடிதம்  எழுதி அனுப்புவார்கள். ஆனால் இப்போதோ இதழியல் துறை, செய்தியாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடிதங்களுக்குப் பதிலாக அரிவாள், கத்திகளும் செய்தியாளர்களைப் பதம் பார்க்கின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகின்றன என்பது குறித்து ‘எல்லைகள் இல்லாத நிருபர்கள்’ (ஆர்எஸ்எப்) அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பு 180 நாடுகளில் ஆய்வு நடத்தி வெளியிட்டபட்டியலில், சுமார் 75 சதவீத நாடுகளில் ஊடகங்களின் நிலைமை அபாய நிலையில் இருப்பதாக எச்சரிக்கை மணி அடித்துள்ளது. எட்டு சதவீத நாடுகளில் மட்டுமே ஊடக சுதந்திரம் மேம்பட்ட நிலையில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று போற்றப்படும் நம் இந்தியா, ஆர்எஸ்எப் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஒப்பிட்டால் 100 இடங்களுக்கு மேல் பின்தங்கியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரை போலீஸ், தீவிரவாதிகள், ஊழல் அரசியல்வாதிகள், ரவுடி கும்பல்களால் செய்தியாளர்கள் அதிகம் தாக்கப்படுவதாக ஆர்எஸ்எப் சுட்டிக் காட்டியுள்ளது. செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. பாலியல், கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன.

ஒரு நாட்டில் சமுதாயமும், அரசியல் தலைமையும் மனம் வைத்தால் மட்டுமே ஊடக சுதந்திரம் காப்பாற்றப்படும். சமூக விரோத கும்பல் நடமாட்டத்தை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தாக்குதலுக்கு உள்ளான மனோகருக்கு நியாயம் கிடைக்கவும், உரிய நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். "செய்திதுறையினர் தனி பாதுகாப்பு சட்டம்" ஏற்படுத்தி சமூக அச்சுறுத்தல் இன்றி செயல்பட வழிவகை செய்யவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் வலியுறுத்துகிறது.

மேலும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் காவல்துறையினர் செய்தியாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன்  சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

"செய்தியாளர்களை தாக்குவது, 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழிக்கு ஏற்ப, கடும் விளைவுகளை ஏற்படுத்தும்  என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். உண்மையைச் சொல்வதற்காக செய்தியாளர்களை மிரட்டுவது மற்றும் தாக்குவது, நியாயம், நீதிக்கு எதிரானதோடு, சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்."

இவ்வாறு நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !